Sunday, January 20, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 5

5

இரண்டு சமூகங்களுக்குள் மோதல்கள் வருவது இயல்புதான் என்பதை நாம் அறிவோம். அம்மோதல்கள் சில நேரங்களில் இராணுவப் படையெடுப்பாகவும், சில வேளைகளில் பண்பாட்டுப் படையெடுப்பாகவும் அமையும்.
-
தமிழ்ச் சமூகம், ஏடறிந்த காலம் தொட்டு, இரண்டு விதமான படையெடுப்புகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.
-
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ் அரசர்களே, ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டிருந்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மோதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் மூன்று மன்னர்களின் ஆட்சிகளின் கீழ் இருந்த அனைவரும் தமிழர்களே!
-
அன்றைய தமிழ்நாட்டின் நிலை, சமூக ஒருமையும், அரசுப் பன்மையும் கொண்டதாக இருந்தது. எனவே, அரசுகளுக்கு இடையிலான மோதல், பண்பாட்டுத் தளத்தின் மாற்றம் எதனையும் ஏற்படுத்திவிடவில்லை.
-
கி.பி. 2ஆம் நூற்றாண்டு அளவில், களப்பிரர் கி.பி. 5இல் பல்லவர் ஆகிய மன்னர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து ஆட்சியைக் கைப்பறினர். அப்போது பண்பாட்டுக் கலப்பும், பண்பாட்டு ஆதிக்கமும் தொடங்கின.
-
பண்பாட்டு ஆதிக்கம் முதலில் மொழி மீதுதான் செலுத்தப்படும் என்பது வரலாறு. இங்கும் அப்படித்தான் நடைபெற்றது. தமிழைப் புறந்தள்ளிவிட்டு, சமஸ்கிருதம் ஆட்சிக் கட்டிலுக்கு அருகில் அமரத் தொடங்கியது. ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்ற காரணத்தால், பொதுமக்களிடமும் அம்மொழி செல்வாக்குப் பெற்றது.
-
கி.பி. 470ஆம் ஆண்டு, தமிழகம் வந்த சீனப் பயணியான யுவான் சுவாங், தன் பயணக் குறிப்பில், ''சென்னையில் உள்ள திருவொற்றியூர், காஞ்சிபுரம், புதுவைக்கு அருகில் உள்ள பாகூர் ஆகிய மூன்று ஊர்களில் மட்டுமே ஏறத்தாழ 5000 மாணவர்கள், சமஸ்கிருதம் படித்துக் கொண்டிருந்த செய்தியை விளக்குகின்றார்.
-
பிற்காலப் பாண்டியர் சோழர் ஆட்சியிலும் அந்நிலை தொடர்ந்தது. குறிப்பாக, இராஜராஜசோழன் காலத்தில், சமஸ்கிருதம் அறிந்தவர்கள் மட்டுமே அரசனின் மதிப்பைப் பெற்றனர். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிய உரிமையாக ஆக்கப்பட்டது.
-
நாயக்கர் ஆட்சிக் காலம், பண்பாட்டுத் தளத்தைப் பொறுத்தப்பட்டில், சோழர் ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருந்தது.
-
சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியனவற்றில் உள்ள தமிழ்மொழி, மக்களுக்கு அந்நியமாகிப்போனது. எனவே அவ்விலங்கியங்களுக்குப் பொழிப்புரை, கருத்துரை எழுத வேண்டியதாயிற்று. அவ்வாறு எழுதிய உரையாசிரியர்கள் பலர், தமிழும், சமஸ்கிருதமும் கலந்த நடையையே பின்பற்றினர். மணியும், பவளமும் கலந்து கோத்த மாலை போல, தமிழும், சமஸ்கிருதமும் கலந்து கிடக்க வேண்டும் என்று விரும்பினர். அதுபோன்ற தமிழ் உரைநடைக்கு 'மணிப்ரவாள நடை' என்று பெயரிட்டுப் பெருமைப் படுத்தினர்.
-
எவ்வளவு புலமை வாய்ந்த தமிழ்ப் புலவர் என்றாலும், அவருக்கு சமஸ்கிருதப் புலமையும் இருந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக ஆனது. அழகிய தமிழ்ச்சொற்களால் ஆக்கப்பட்ட ஆழ்வார்ப் பாசுரங்களுக்கு 'ஈட்டு உரை' எழுதிய பெரிய வாய்ச்சான் பிள்ளையின் மணிப்ரவாள நடையே போற்றிப் பாராட்டப்பெற்றது.
-
தமிழில் இலக்கியம் படைப்போரின் எண்ணிக்கை குறைந்து போனது. மிகச் சிலவாக வெளிவந்த இலக்கியங்களும் கூடச் 'சிற்றிலக்கியங்கள்' என்றே பெயர் பெற்றன.
-
இப்படியாகத் தமிழன் தன் பழம்பெரும் மொழியின் சிறப்பை இழந்தான்.
-
பழக்கவழக்கங்களிலும் பல அந்நியப் பண்பாடுகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின.
-
பழந்தமிழரின் திருமண முறைகள் மாறத் தொடங்கின. அகநானூறு காட்டும் திருமண முறைகள் வேறாகவும், சிலப்பதிகாரம் காட்டும் திருமண முறைகள் வேறாகவும் உள்ளன.
-
தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே, கோவலன்-கண்ணகி திருமணம்தான், முதன் முதலாகத் தீவலம் வந்து, புரோகிதர்கள் மந்திரம் சொல்லி நடத்தி வைத்த திருமணமாகப் பதிவாகியுள்ளது.
-
சிந்து சமவெளி நாகரிகம், ஆதிச்சநல்லூர்ப் புதைகுழி ஆய்வுகளைக் கொண்டு பார்க்கும்போது, மண்ணையும், பெண்ணையும் போரில் மாண்ட மாவீரர்களையும் மட்டுமே தமிழர்கள் வணங்கி வந்துள்ளனர். நெருப்பை வணங்கும் வழக்கம் இடையில் வந்துள்ளது. அப்பழக்கம் ஏற்பட்ட பின்னரே, யாகங்கள் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். சங்க காலத்திலேயே இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, முதுகுடுமிப் பல்யாகசாலைப் பெருவழுதி ஆகிய மன்னர்களின் அடைமொழிப் பெயர்கள், வேள்விகள் நடைமுறைக்கு வந்து விட்டதைக் காட்டுகின்றன.
-
அதன் தொடர்ச்சியாகவே, கோவலன்லிகண்ணகி திருமணத்தில் அவர்கள் நெருப்பை வலம் வந்து 'அக்கினி சாட்சியாக' மணமுடித்துக் கொண்டுள்ளனர்.
-
பழந்தமிழகத்தில், பெரிய பெரிய தாழிகளில் (பானைகள்) வைத்தும், பிறகு நேரடியாகவும், இறந்து போனவர்களை மண்ணில் புதைக்கும் பழக்கம் இருந்தது. பிற்காலத்தில், நெருப்பை வழிபடும் அந்நியப் பண்பாட்டை ஏற்றுக்கொண்ட தமிழன், இறந்தவர்களின் உடலுக்கு நெருப்பு வைக்கத் தொடங்கினான். கி.பி. 958ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றுதான், முதன்முதலில், பிணங்கள் எரியூட்டப்பட்ட செய்தியை நமக்குக் கூறுகின்றது.
-
பழந்தமிழகத்தில், காதலும், காதலர்களின் உடன்போக்கும் இயல்பான சமூகப் போக்காக இருந்தது. பிறகுதான், பெற்றோர், உறவினர் ஒப்புதலை நோக்கிக் காதலர்கள் காத்திருக்கும் நிலை உருவாயிற்று.
-
சங்க காலத்தில் கல்வி எல்லோருக்கும் பொதுவாக இருந்தது. பெண்களிலும் பலர் சங்கப் புலவர்களாய் இருந்ததைக் காண முடிகிறது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாய் அந்த உரிமை பறிபோயிற்று.
-
தமிழர்களின் வழிபாட்டு முறைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. போரில் இறந்தவர்கள், இறந்த சான்றோர்கள் ஆகியோரின் நினைவாய் நடப்படும் நடுகற்களையே அன்று வணங்கினர். நடுகல் வழிபாடு மெல்ல மெல்ல அகன்று, கற்பனைக்கு எட்டாத, ஆறு தலைகள், 12 கைகள் கொண்ட, பல்வேறு அவதாரங்கள் எடுக்கக் கூடிய பெருந்தெய்வங்களைத் தமிழர்கள் வணங்கத் தொடங்கினர்.
-
இவ்வாறாகத் தமிழன் தன் பண்பாட்டுக் கூறுகளையும் இழந்தான்.
-
தமிழ்மண் அறியாத, புதிய பண்பாடாக, 'சாதியப் பண்பாடு' உள் நுழைந்தது.
-
சாதிகள், தமிழர் ஒற்றுமையைக் குலைத்தன. சமத்துவத்தைக் குலைத்தன. மூடநம்பிக்கைகளை வளர்த்தன. நச்சுச் செடியாய், மரமாய் நாடெங்கும் சாதி வளர்ந்தது.
-
அந்தச் சாதியின் தோற்றம், வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட மாபெரும் கேடுகள் ஆகியன குறித்து அறியாமல், தமிழ்ச் சமூகம் பற்றி நாம் அறிந்து கொள்ளவே முடியாது.

Wednesday, January 2, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 4

4
.
நாம் ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்கள்தாம். யார் ஒருவரைப் போலவும் இன்னொருவர் இல்லை; இருக்க வேண்டியதும் இல்லை. 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்னும் பழமொழி கூட, ஒரு விதமான சாயலைத்தான் குறிக்கின்றதே அன்றி, ஒருவரைப் போல இன்னொருவர் 'அச்சு அசலாக' இருப்பார் என்று கூறவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணம், நிறம், பழக்கவழக்கங்கள் இருந்தே தீரும். எனவே நாம் ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்கள்தாம்.
.
ஆனாலும், நாம் மட்டும் இந்த உலகில் தனியாக வாழவில்லை. நம்மைப் போலவே இன்னும் பல கோடி மனிதர்கள், பல்வேறு விதமான விலங்குகள், மரம்-செடி-கொடிகள், பலவோடும் சேர்ந்தே வாழ்கிறோம். ஆக, நாம் ஒரு சமூகத்திற்குள் வாழ்கிறோம். அச்சமூகம் ஒரு நாட்டிற்குள்ளும், அந்நாடு இவ்வுலகத்திற்குள்ளும் அடங்கியிருக்கின்றன. ஆகையால், நாம் தனி மனிதர்கள் என்றாலும், சமூகம், நாடு, உலகம் ஆகிய அனைத்தும் நம்மைப் பாதிக்கின்றன; நாமும் அவற்றைப் பாதிக்கின்றோம்.
.
ஆதலால் தனிமனிதன் X சமூகம், தனிமனிதன் X நாடு, தனிமனிதன் X உலகம் ஆகிய உறவு அல்லது முரண், பல்வேறு மேன்மைகளுக்கும், பல்வேறு சிக்கல்களுக்கும் வழி வகுக்கின்றன. இந்த உறவு / முரண் பின்னல்களைப் புரிந்துகொண்டு, தம் தனி வாழ்க்கையை 'லாவகமாக' அமைத்துக்கொள்கின்றவர்கள். சமூகம், நாடு, உலகம், ஆகியனவற்றால் பயன் பெறுகின்றனர். அவற்றையும் பயன் அடையச் செய்கின்றனர். இயலாதவர்கள், அவற்றினால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவற்றிற்கும் சிக்கல்களை உருவாக்குகின்றனர்.
.
எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகப் பார்வை, தேசியப் பார்வை, உலகப் பார்வை என்பன கண்டிப்பான தேவைகளாக உள்ளன. உலகில் பலநூறு வகையான சமூகங்கள் உள்ளன. ஒவ்வொரு சமூகமும், 'ஒரு வகையான' மக்கள் கூட்டம், அந்த 'வகை' எப்படி உருவாகின்றது என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு பொதுவான மொழி. அம்மொழியின் விளை பொருள்களான கலை, இலக்கியம், அவற்றினால் வெளிப்படுத்தப்படும் பண்பாடு, அது உருவாக்கும் பொதுவான உளவியல் பாங்கு, அனைத்தையும் கற்றுத்தரும் கல்வி முதலான பல்வேறு கூறுகளால் ஒரு சமூகம், கால ஓட்டத்தில், கட்டமைக்கப்படுகின்றது. பிறகு ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு வரலாறு உருவாகின்றது.
.
வேறுபட்ட சமூகங்களுக்குள் உறவும், மோதலும் ஏற்படுகின்றன. உறவைப் பேணி வளர்க்கவும், மோதலில் வென்று அவர்களை அடிமை கொள்ளவுமாகச் சமூகத் தலைமைகள் பிறக்கின்றன. சமூகத் தலைமைகள், ஒரு கட்டத்தில் அரசுகளாக (State) நிலை பெறுகின்றன.
>
ஒரு சமூகம், ஒரு நாடு இரண்டிற்குமிடையில், அரசு வகிக்கும் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. ஓர் அரசின் இறையாண்மைக்கு (Soverignity) அதாவது அதிகார ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகம் அல்லது சமூகங்கள் ஒரு நாடு என்று பெயர் பெறுகின்றது. சமூகத்திற்கும் சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால் அவை திட்டவட்டமாக எழுதப்படாதவை. மரபு வழித் தொடர்ச்சியாக உணரப்படுபவை. அரசின் சட்டங்களோ கறாரானவை. ஆட்சி அதிகாரம் உடையவை.
.
ஒரு சமூகம், எப்போது ஒரு ஆட்சியின் கீழ் வருகின்றதோ, அப்போதுதான் அது ஒரு நாட்டின் பகுதியாகவோ அல்லது தனி நாடாகவோ ஆகின்றது. ஒரே ஒரு சமூகம், ஒரு தனி நாடாக ஆகும்போது அதனை ஒரு தேசிய அரசு (National State) என்றும், பல சமூகங்கள் இணைந்து ஒரு நாடு உருவாகும் வேளையில், அதனைப் பல்தேசிய (Multinational State) அரசு என்றும் அழைக்கின்றனர். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் ஒரு தேசிய அரசுகளாக உள்ளன. பல்தேசிய அரசுக்கு இந்தியா ஏற்ற எடுத்துக்காட்டாக உள்ளது. சமூகம் என்பதே நாட்டினம் அல்லது தேசிய இனம் (Nationality) என்று அழைக்கப்படுகிறது. தேசிய இனம் நாடாக உருமாறும் பொழுது இன்னொரு விந்தையும் நடைபெறுகின்றது. ஒரே தேசிய இனம் இரண்டு, மூன்று நாடுகளாகவும் ஆகிவிடுகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் ஆங்கில தேசிய இனமே உள்ளது. அவ்வாறே ஸ்பானிய தேசிய இனம், ஸ்பெயின், க்யூபா, அர்ஜென்டைனா முதலான பல நாடுகளில் பரவியுள்ளது.
.
ஆங்கிலேயர்களும், ஸ்பானியர்களும் மேற்காணும் நாடுகளில், ஆளும் தேசிய இனமாக உள்ளனர். ஆனால் இந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இரு நாடுகளில் உள்ள தமிழ்ச் தேசிய இனமும், ஈரான், ஈராக், துருக்கி, சிரியா ஆகிய நான்கு நாடுகளில் வாழும் குர்து தேசிய இனமும், ஆளப்படும் தேசிய இனங்களாக உள்ளனர்.
.
மொத்தத்தில் உலகில் உள்ள நாடுகளைச் சமூக அடிப்படையில் நாம் மூன்று விதமாகப் புரிந்து கொள்ளலாம்.
1. ஒரே சமூகம் - ஒரு நாடு
2. பல்வேறு சமூகங்கள் - ஒரு நாடு
3. ஒரு சமூகம் - பல்வேறு நாடுகளில்.
.
சமூகம் என்று நான் குறிப்பிடுவதை, அரசியல் அறிவியல் (Political Science) துறையினர் தேசிய இனம் என்று கூறுவதாகச் சொல்லியுள்ளேன். ஏன் இந்த வேறுபாடு எனில், சமூகம் என்ற சொல், இன்று வழக்கில் பல்வேறு பொருள்களில் கையாளப்படுகிறது. முதலியார் சமூகம், வன்னியர் சமூகம் என்று சாதி அடிப்படையிலும், இந்து சமூகம், இஸ்லாமிய சமூகம் என்று மத அடிப்படையிலும், ஆசிரியர் சமூகம், எழுத்தர் சமூகம் என்று தொழில் அடிப்படையிலும், இன்னும் பல அடிப்படைகளிலும் அச்சொல் ஆளப்படுகிறது. அதனால் அது பொதுமைப்பட்டுத் தனக்குரிய தெளிவை இழந்துள்ளது. எனவேதான், தேசிய இனம் என்று அவர்கள் குறிக்கின்றனர். எனினும் எளிமை கருதி, சமூகம் என்ற சொல்லையே இத்தொடரில் நான் பயன்படுத்துகின்றேன்.
சமூகம் பற்றி-அதாவது நாம் தமிழ்ச் சமூகம் பற்றி முதலில் நாம் தெளிவாக அறிந்துகொண்டு, அதன்பின் நாடு, உலகம் நோக்கிச் செல்லுதல் பொருத்தமாக இருக்கும்.
.
உலகில் உள்ள மிகத் தொன்மையான (பழமையான) சமூகங்களில், நம் தமிழ்ச் சமூகமும் ஒன்று. இக்கூற்று, பெருமை நோக்கிச் சொல்லப்படவில்லை. வரலாற்று உண்மை என்னும் அடிப்படையிலேயே குறிப்பிடப்படுகின்றது.
-
தொன்மையான சமூகங்கள் எல்லாவற்றிற்கும், மரவு ரீதியான பல பெருமைகளும், நவீன உலகிற்கு வர முடியாத சில சிக்கல்களும் இருக்கும். பழமையின் பெருமை பேசிப் பேசித் தங்களைப் புனிதமானவர்களாகக் கருதி, அடுத்த கட்டத்திற்கு வர முடியாமல், சின்னச் சின்னத் திட்டுகளாகத் தேங்கிப்போகும் பழங்குடிகள் பல உலகில் இருக்கவே செய்கின்றன. ஆனால் தமிழ்ச் சமூகம் அந்த விபத்திலிருந்து தப்பி வெளிவந்துவிட்டதனால், 'முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்' இயங்கிக் கொண்டுள்ளது.
.
நம் சமூகத்தின் தொன்மைக் கூறுகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. உலகிலேயே மிகப் பழமையான மொழிகள் என்று ஆறு மொழிகளை மொழியியல் அறிஞர்கள் குறிக்கின்றனர். கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகியவையே அவை. தற்செயலாக அவற்றுள் மூன்று மேலை நாடுகளின் மொழிகளாகவும், மூன்று கீழை நாடுகளின் மொழிகளாகவும் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.
-
ஆறு மொழிகளும் இன்று உயிருடன், மக்கள் மொழிகளாக இருக்கின்றனவா என்றால், இல்லை.
-
நெடுநாள்களுக்கு முன்பே கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு ஆகியவை வழக்கிழந்து விட்டன. ஆங்கிலோ-சாக்ஸன் மொழிக் குடும்பத்தில் மூத்த மொழிகளான கிரேக்கமும், லத்தீனும் 14ஆம் நூற்றாண்டு வரை மேற்கு உலகை ஆளும் மொழிகளாக இருந்தன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட, தங்கள் தாய் மொழியான ஆங்கிலத்தைத் தாழ்வாகக் கருதினர். 'லத்தீன் பட்டுத் துணி போன்றது, ஆங்கிலம் கந்தைத் துணி போன்றது' என்று ஆங்கிலேயர்களே கருதிய காலம் அது. ஆனால் காலப்போக்கில், ஆங்கிலம் உலகமொழி என்னும் இடத்தையே பிடித்துவிட்டது. கிரேக்கமும், லத்தீனும் காணாமல் போய்விட்டன.
-
ஹீப்ரு மொழி வழக்கிழந்து போனாலும், அதனைத் தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் மீண்டும் அதனைப் புதுப்பிப்பதில் விடா முயற்சியுடன் உள்ளனர். 'இட்டீஷ்' (Iddish) என்னும் பெயரில், அது இன்று உயிர்பெற்றுள்ளது. இஸ்ரேல் நாடும் அந்தச் சமூகத்தினரும் அதற்காக அரும்பாடு பட்டுக்கொண்டுள்ளனர்.
கீழை மொழிகளைப் பொறுத்தவரையில், சமஸ்கிருதம் என்பது மந்திரங்களைக் கொண்ட, சடங்குகளுக்கு மட்டும் பயன்படுகின்ற புரோகித மொழி (Prohit Language) யாகவே என்றும் இருந்துள்ளது. அது வெகு மக்களின் வழக்கு மொழியாக என்றும் இருந்ததில்லை.
-
இறுதியாக, தமிழ், சீனம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இன்றும் நிலைத்து நிற்கும் தொன்மை மொழிகளாக உள்ளன. இவற்றுள்ளும், கணிப்பொறித்துறை முதலிய இன்றைய அறிவியல் துறைகளில், தமிழ் வெகு விரைவாக முன்னேறி வருவதை நாம் அறிவோம்.
-
இச்செய்திகளில் எவையும், தற்பெருமைக்காகவோ, புனைந்துரையாகவோ எழுதப்படவில்லை. உண்மைகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. எனினும், இத்தகைய சிறப்பைப் பெற்றுள்ள நம் சமூகம் எப்படி, எப்போது பின்னடைந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?

Text Widget

Text Widget