Wednesday, February 20, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 7

7


சாதி, மதம், மொழி, எல்லாவற்றையும் மீறி, ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுவது, அன்றிலிருந்து இன்றுவரை இயல்பான ஒன்றே, அதனால்தான் காதலை 'உயிரியற்கை' என்றார் பாரதிதாசன்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, காதலானது வருணச் சுவர்களை இடித்துத் தகர்க்கத் தொடங்கியது. வருணக் கலப்பில் குழந்தைகள் பிறக்கத் தொடங்கினர்.

எனவே, வருணங்களுக்கிடையிலான சுவர்களை, மேலும் வலிமையாகக் கட்டிட வேண்டிய தேவை, மேல்வருணத்தினர் எனப்பட்டோருக்கு அன்று ஏற்பட்டது.

வருணக் கலப்பு, மிகக் கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் பிறந்த குழந்தைகள் பஞ்சமர் (தலித்) என்றும், சண்டாளர் என்றும் பெயர் சூட்டப்பட்டு, வருணங்களுக்கு வெளியில், அதாவது வருணங்கள் அற்றவர்களாக நிறுத்திவைக்கப்பட்டனர். 'அவருணத்தார்' என அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு, பாராமை, நெருங்காமை, தீண்டாமை ஆகிய மூன்று கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.

ஒரே மாதிரியாகப் பார்க்கப்படவில்லை. பார்ப்பன, சத்திரியக் கலப்பையும், பார்ப்பனலிவைசியக் கலப்பையும், சத்திரியலிவைசியக் கலப்பையும் விட, சத்திரியலிசூத்திரக் கலப்பும், வைசியலிசூத்திரக் கலப்பும் கூடுதல் குற்றமாகக் கருதப்பட்டன. எல்லாவற்றையும்விட பார்ப்பனலிசூத்திரக் கலப்பு, பெரும் பாவமாகவே அறிவிக்கப்பட்டது. மற்றவர்கள் பஞ்சமர்கள் என்றும், பார்ப்பனப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்த மக்கள் சண்டாளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

பஞ்சமர்கள் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டனர். சண்டாளர்களோ, நெருங்காமை, பாராமை போன்ற கூடுதல் கொடுமைகளுக்கும் ஆளாயினர். பஞ்சமர், சண்டாளர் அனைவரும் ஊருக்கு வெளியில், சேரிகளில்தான் வாழ வேண்டும். அவர்களைத் தொட்டாலே தீட்டு என்றனர். அவர்கள் அனைவரும், மனிதரிலும், ஏன் விலங்குகளிலும், கீழானவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது இந்து மதத்தின் எழுதப்படாத சட்டங்கள் ஆயின. அதனால்தான் நாய், மாடு போன்ற விலங்குகளைக்கூடத் தொடும் மனிதர்கள், சாதியின் பெயரால், மனிதர்களைத் தொட்டால் தீட்டு என்று கருதும் இழிவான மனப்பாங்கு இன்றும் உள்ளது.

சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளோ, மிகக் கொடுமையான தண்டனைகள். ''அவர்கள் உடைந்த மட்பாண்டங்களிலே மட்டுமே உணவு உண்ண வேண்டும். பித்தளை, இரும்பில் மட்டுமே அணிகலன்கள் அணியவேண்டும். பிணங்களுக்குப் போர்த்திய துணிகளை மட்டுமே ஆடைகளாக உடுத்திக்கொள்ள வேண்டும்.'' என்னும் காட்டுமிராண்டிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

'சண்டாளன்' என்னும் சொல்லை நாம் வேடிக்கையாக, அடப்பாவி சண்டாளா என்று இன்றும் பயன்படத்துகிறோம். ஆனால் அது ஒரு வேடிக்கையான வசைச்சொல் அன்று.

மிகக் கொடூரமான, மனிதர்களை இழிவுபடுத்தும், வருண அடுக்கைக் காப்பாற்றப் பிறந்த சொல் அது.

இத்தீண்டாமைக் கோட்பாடு, கி.பி.5ஆம் நூற்றாண்டு அளவில், பாலாத்தியன் என்னும் மன்னன் ஆட்சிக்காலத்தல், திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதை அம்பேத்கர் தன் ஆய்வில், வலிமையான சான்றுகள் மூலம் நிறுவியுள்ளார்.

இவையெல்லாம் பழங்கதைகள். இப்போது பாராமை, நெருங்காமை எல்லாம் எங்கு உள்ளன? ஏன் பழையன குறித்து இப்போது நாம் பேச வேண்டும் என்று இளைஞர்கள் சிலர் வினாக்களைத் தொடுக்கின்றனர்.

இன்றைக்கும், அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய யுகத்திலும், தீண்டாமை உள்ளதா, இல்லையா? ஒவ்வொரு கிராமத்திற்கும் வெளியில் ஒரு சேரி உள்ளதா, இல்லையா? தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் 'இரட்டைக் குவளைகள்' நடைமுறையில் காணப்படுகின்றனவா, இல்லையா?

இவையெல்லாம் மனிதகுல வரலாற்றின் அநாகரிகச் சின்னங்கள் என்னும் கோபமும், கொந்தளிப்பும் நமக்குள் ஏன் ஏற்படவில்லை?

மாநகரங்களில், கணிணித் தொழில்நுட்பக் கண்ணாடி மாளிகையில் சாதியும், தீண்டாமையும் எங்கே உள்ளது என்று கேட்கலாம். அங்கும் கூட, மனித மனங்களில் சாதி அழுக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறதா, இல்லையா என்பதை மனச்சாட்சி உள்ளவர்கள் உரத்துச் சொல்லுங்கள். திருமணம் என்று வரும்போது, குலம், கோத்திரம், சாதி, உட்சாதி அனைத்தும் பார்க்கப்படுகிறது என்பதுதானே நடைமுறையாக உள்ளது. பிறகு எப்படி, மாநகரங்களில் சாதி ஒழிந்துவிட்டதாகக் கருத முடியும்?

வருணத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த நாம், திடீரெனச் சாதிக்குள் வந்துவிட்டதாக எண்ணத் தேவையில்லை. வருணத்திலிருந்தே சாதிகளும், பிறகு உட்சாதிகளும் தோன்றின என்பது சமூக வரலாறு. அதனால்தான் இந்து மதம் என்பது, வருண சாதி அமைப்பைத் தன் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

இந்த இடத்திலும் சில இளைஞர்கள் என்னோடு ஒரு மோதலுக்குத் தயாராவார்கள் என்பதை நான் அறிவேன். ஏன் எப்போது பார்த்தாலும் இந்து மதத்தையே சாடுகின்றீர்கள், பிற மதங்களில் பிரிவினையோ, குறைபாடுகளோ இல்லையா என்பது நெடுநாளாகத் தொடுக்கப்பட்டு வரும் வினா. 'இந்து மத துவேஷிகள்' என்பது எம் போன்றோருக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கும் பட்டம்.

எல்லா மதங்களிலும் பிரிவுகள் உள்ளன என்பதை யார்தான் மறுக்க முடியும்? கத்தோலிக்கம், பிராட்டஸ்டண்ட் என்று கிறித்தவ மதமும், சன்னி, ஷியா என்று இஸ்லாமிய மதமும், மஹாயானம், ஹீனயானம் என்று பௌத்த மதமும் பிளவுப்பட்டு நிற்பது உண்மைதான். வேறு பல மதங்களிலும் இவைபோன்றும், இன்னும் பலவாறாகவும் பிரிவுகள் இருக்கவே செய்கின்றன.

ஆனால் இவற்றிற்கும், இந்து மதத்தில் உள்ள சாதிப் பிரிவுகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகள் முற்றிலும் வேறானவை. மற்ற மதங்களுக்கிடையே உள்ள பிரிவுகளுக்குள் பகையே கூட உள்ளது. ஆனால் அங்கு ஏற்றத்தாழ்வோ, தீண்டாமையோ கற்பிக்கப்படவில்லை என்பதே முதன்மையானது. அந்தப் பிரிவுகளுக்குக் காரணம் கோட்பாடுகளும், வழிபாட்டு வேறுபாடுகளும், அதிகாரப் போட்டிகளும், வேறுபட்ட நம்பிக்கைகளுமே ஆகும். பிறப்போ, வருணமோ காரணங்கள் இல்லை.

அந்தப் பிரிவுகள் எத்தகையன எனில், இந்து மதத்திற்குள் உள்ள சைவ, வைணவ, சாக்த, காணபத்யப் பிரிவுகளைப் போன்றவை. அவை போன்ற பிரிவுகள் இந்து மதத்தில் இன்னும் எண்ணற்றவையாக உள்ளன. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களைக் கூட, இந்து மதத்தில் உட்பிரிவுகளாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் இன்றும் கூறுகிறது. கிறித்தவம், இஸ்லாமியம், பார்சி ஆகிய மூன்று மதங்களைத் தவிர, மற்றவை அனைத்தும் இந்து மதத்தின் உட்கூறுகள் என்றே சட்டம் சொல்கிறது. அவர்களுக்கிடையே ஏற்படும் சட்டச் சிக்கல்கள் அனைத்தும் 'இந்துச் சட்டத்தின்' கீழ்தான், நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

ஆதலால், இந்து மதம் உள்ளிட்ட பல்வேறு மதங்களில் காணப்படும் உட்பிரிவுகளையும், வருண லி சாதி அடுக்கையும் நாம் ஒப்பிடுவது முறையாகாது. இவை மனித நேயமற்ற, மனித நாகரீகத்திற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் புறம்பாகக் கற்பிக்கப்பட்டுள்ள இழிவு என்பதை இளைய தலைமுறையினர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைய நிலையிலும் வருணப் பிரிவை ஆதரிக்கின்றவர்கள் இருக்கவே செய்கின்றனர். காந்தியடிகளே, தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்த போதிலும், வருணங்களை ஏற்கவே செய்தார். வருணம் என்பதைத் தொழில் பிரிவாகக் கருதியதே அதற்கான காரணம். உலகில் அனைவரும் ஒரே தொழிலைச் செய்து கொண்டிருக்க முடியாது. பலரும் பல்வேறு தொழில்கள் புரிவதன் முலமே, உலக இயக்கம் நடைபெறும். ஆகவே வருணங்கள் இருப்பதில் பிழை இல்லை என்று காந்தியடிகள் கருதினார்.

மனிதர்கள் மாறுபட்ட தொழில்களில் ஈடுபடுவதைச் சரியானது என்றே நாமும் கருதுகின்றோம். எனினும், வருணம் என்பது தொழில் பிரிவினையை மட்டும் சுட்டி நிற்கவில்லை. அத்தொழில்களுள் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றது. மேலும் அப்பிரிவைப் பிறப்போடு தொடர்புபடுத்துகின்றது.

யாரெல்லாம் போர் புரிகின்றனரோ, அவர்கள் சத்திரியர் என்றும், யாரெல்லாம் வணிகம் செய்கின்றனரோ அவர்கள் வைசியர் என்றும் கூறப்படவில்லை. போர் புரிந்தாலும, இல்லையென்றாலும், வீரம் மிக்கவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அரச குடும்பத்தில் பிறக்கும் அனைவரும் சத்திரியர்களே. எவ்வளவுதான் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினாலும், உழைக்கும் மக்கள் வீடுகளில் பிறக்கும் அனைவரும் சூத்திரர்களே. அதாவது, ஒருவனின் வருணம், அவனது குணநலன்களைக் கொண்டோ, தகுதி, திறமைகளைக் கொண்டோ தீர்மானிக்கப்படுவதில்லை. அவனது பிறப்பைக் கொண்டே முடிவு செய்யப்படுகின்றது.

வருண அமைப்பு, தமிழகத்துள் புகத் தொடங்கிய அந்த நாட்களில், அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், சில நெகிழ்வுகள் காணப்படுகின்றன. ''வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்'', அவனும் மேற்பாலாகக் கருதப்படுவான் என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். அன்றைக்கே, வேற்றுமைகள் நிறைந்த நான்கு வருணங்கள் இருந்திருக்கின்றன என்பதும், அவற்றுள் மேல், கீழ் என்னும் வேறுபாடுகளும் இருந்திருக்கின்றன என்பதும் தெளிவாகின்றது. இருந்தபோதிலும், கீழ்ப்பால் ஒருவனும் கற்க முடிந்துள்ளது என்பதோடு, அந்தக் கல்வி அவனை மேல்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது என்பதே அப்பாடல் மூலம் நாம் அறிந்திடும் செய்தி. பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், தகுதியைக் கொண்டே, மேல், கீழ் என்பன முடிவாகியிருக்கின்றன என்பது உறுதியாகின்றது.

பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்படுவதை எதிர்க்கும் முதல் இலக்கியமாகத் திருக்குறள் நமக்குக் கிடைத்துள்ளது. ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்கிறது குறள். அது மட்டுமல்லாமல், அக்குறளின் அடுத்த வரி, செய்தொழிலில் உள்ள வேற்றுமையால் சிறப்பு வந்து சேர்ந்துவிடாது என்கிறது. 'வருணதர்மத்திற்கு' எதிரான முதல் குரலாக குறள் அன்று ஒலித்துள்ளது.

இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் இன்னும் பலவாக அன்று இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. எத்தனையோ நூல்கள் அழிந்துபோய் உள்ளன. அழிக்கப்பட்டும் உள்ளன. அப்படி சுவை ஆகியிருக்கக்கூடும்.

எவ்வாறாயினும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிய தேவையும், வருணத்தை நிலைநாட்ட வேண்டிய தன்னவமும் எழுந்த வேளையில் வருணக் கலப்பைத் தடுப்பதற்கு வெறும் தண்டனைகள் மட்டும் போதுமானவையாக இல்லை. கடவுளின் பெயரால் வருணங்களையும், அவற்றுக்கிடையே எழுப்பப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்துவதே சிறந்த வழி என்று கருதியிருக்க வாய்ப்புண்டு.

அந்தக் கருத்தின் இலக்கிய வடிவமே, ''பகவத் கீதை'' என்று சொன்னால், சிலர் அதிர்ச்சியடையக் கூடும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அதிரிச்சியடையக் கூடாது.

Tuesday, February 12, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 6

6


உலகில் நம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான அடையாளங்கள் உள்ளன.

'நீங்கள் யார்?' என்னும் ஒரு கேள்விக்கு எத்தனையோ விடைகள் சொல்லப்படலாம்.

இந்தியர், அமெரிக்கர், சீனர் என்றும், தமிழர், தெலுங்கர், வங்காளி என்றும், இந்து, முஸ்லீம், கிருத்துவர் என்றும், ஆசிரியர், தொழிலாளி, எழுத்தாளர் என்றும், பள்ளர், முதலியார், நாடார் என்றும் இன்னும் பலவாறாகவும் நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். நாடு, மொழி, மதம், தொழில், சாதி என்னும் அடிப்படையில் மேற்காணும் அடையாளங்கள் கூறப்படுகின்றன. உறவுகளின் அடிப்படையில் அப்பா, அண்ணி, அத்தை என்றும் விடை கூறலாம்.

எல்லாம் அடையாளங்கள்தான். ஆனால் இவை அனைத்திலிருந்தும் 'சாதிய அடையாளம்' வேறுபட்டிருப்பதை, நுட்பமாகப் பார்த்தால் அறிய முடியும். எல்லைக் கோடுகளின் அடிப்படையில் நாடும், மொழி அடிப்படையில் தேசிய இனமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் மதமும், பணி அடிப்படையில் தொழிலும் தீர்மானிக்கப்படுகின்றன. சாதியோ, பிறப்பின் அடிப்படையில் முடிவாகின்றது.

நாடு, மொழி, மதம் ஆகியன அடுத்தடுத்து நிற்கும் வரிசை (ஐர்ழ்ண்க்ஷ்ர்ய்ற்ஹப் ப்ண்ய்ங்). சாதி அமைப்போ, ஒன்றின் கீழ் இன்னொன்று என வைக்கப்பட்டிருக்கும் அடுக்கு (யங்ழ்ற்ண்ஸ்ரீஹப் கண்ய்ங்).

ஒவ்வொருவரும் தங்களின் நாடு, மொழி ஆகியனவற்றை உயர்வாகக் கருதியும், பேசியும் வருவது இயல்பே என்றாலும், இந்த மொழி உயர்ந்தது, இந்த மொழி தாழ்ந்தது என்று எங்கும் எப்போதும் எந்த முடிவும் இல்லை. தொழில் அமைப்பும் கூட அவ்வாறானதே.

ஆனால், சாதி மட்டுமே மிகத் தெளிவாக மேல் ஜாதி, கீழ் ஜாதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. பிறப்பே அடிப்படை, ஏற்றத்தாழ்வே உள்ளடக்கம் என்னும்போக்கில் நிலை பெற்றிருப்பதும், இந்த இரண்டினால் மட்டுமே உயிர்வாழ்வதும் சாதியாகும்.

சாதி என்னும் இந்த அமைப்பு, இந்தியாவில் மட்டுமே உள்ளது என்பது இன்னொரு செய்தி. சிறீலங்காவில், பாகிஸ்தானில், பர்மாவில், பங்களாதேசத்தில் சாதி உள்ளதே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான் அந்த நாடுகளிலும் சாதியப் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றன. காரணம், அந்நாடுகளும் ஒரு காலத்தில் இந்தியாவோடு இணைந்திருந்தன என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த நாடுகளிலும் மட்டுமே சாதி உள்ளது. வேறு எங்கும் இல்லை. மேலை நாடுகளில் உள்ள நிறவெறி சாதியோடு ஒத்தது என்னும் கருத்தையும் நாம் புறந்தள்ள முடியாது. இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியவையே.

சாதியின் தாய் வருணம் என்று கூறலாம். பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வருணப் பிரிவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்க்க முடிகின்றது.

இந்திய வரலாற்றில் மௌரியர் ஆட்சி முடிந்து, தங்கர்களின் ஆட்சி தொடங்கும்போது, புஷ்யமித்திர சுங்கனின் ஆட்சியில், மனு என்னும் புனைப் பெயரைக் கொண்ட சுமதி பார்கவா என்பவரால் எழுதப்பட்ட நூலே 'மனுநீதி' என்பதாகும். இந்த மனுநீதிதான், ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு நீதியைச் சொல்கிறது.

ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் சூத்திரன் செய்திருந்தால், அவனுக்குச் 'சிரச்சேத'த் தண்டனையை வழங்கும் மனுநீதி, அதே குற்றத்தை ஒரு பார்ப்பனன் செய்தால் அவன் தலையை மொட்டையடித்தால் போதும் என்கிறது.

இவ்வளவு ஒருதலைப்பட்சமாக நீதி வழங்கப்பட்டிருக்குமா என்ற ஐயம் இளைஞர்களுக்கு வரக்கூடும். அவ்வாறு சந்தேகிப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், சந்தேகிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்கள் உடனே அதைச் சரிபார்க்க வேண்டும் என்பதே நம் விருப்பம். முன்பு வடமொழியில் மட்டும் இருந்த மனுநீதி, இப்போது ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு, நூல் வடிவில் வெளிவந்துவிட்டது. சரிபார்த்துக் கொள்வதில் எந்தச் சிரமமுமில்லை.

ஏன் ஒரு வருணத்துக்கு ஒரு நீதி வழங்கப்பட்டது எனில், ஒவ்வொரு வருணமும் ஒன்றின் கீழ் இன்னொன்றாக அடுக்கப்பட்டிருப்பதே காரணம். அப்படி அடுக்கியவர்கள் யார் என்ற கேள்வி அடுத்து எழுவதும் நியாயமே!

இந்து மதத்தின் அடிப்படை ஸ்ருதியும், ஸ்மிருதியும் என்று கூறுவர், ஸ்ருதி என்பது வேதங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள், பிராமணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஸ்மிருதி என்பது புராண, இதிகாசங்களின் தொகுப்பு.

இவை அனைத்துள்ளும் வேதங்களே தொன்மையானவை.

அவை ரிக், யஜீர், சாம, அதர்வனம் என நான்கு வகைப்படும். இவற்றுள் முதலாவது வேதமான ரிக் வேதத்தின் 10ஆவது அத்தியாயமான 'புருஷசூக்தம்' என்னும் இயலில்தான், நால்வருணப் பிரிவு பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. பிரம்மத்தின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராம்மணர்கள் என்றும், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும், இடையில் தோன்றியவர்கள் வைசியர்கள் என்றும், பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் இந்துமத வேதம் சொல்கிறது.

தலையில் பிறந்தவர்கள், அறிவு தொடர்பான கல்வி கற்க உரியவர்கள் என்பதும், தோளில் பிறந்தவர்கள் வீரம் தொடர்பான போருக்கு உரியவர்கள் என்பதும், இடையில் பிறந்தவர்கள் செல்வம் தொடர்பான வணிகத்திற்கு உரியவர்கள் என்பதும், கால்களில் பிறந்தவர்கள் உழைப்பு தொடர்பான ஏவல் வேலைகளுக்கு உரியவர்கள் என்பதும், அதே புருஷ சூக்தம் தரும் செய்திகள்.

இவ்வாறாகத்தான், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன.

எனினும் இந்த ஏற்றத்தாழ்வுகளை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் தாழ்ந்தவன் என்பதைச் சுயமரியாதை உள்ள யார் ஏற்றுக்கொள்வார்கள்?

எனவே கட்டுப்பாடுகளை மீறி வருணக் கலப்புகள் நடந்தன. வெவ்வேறு வருணங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் உடலுறவு கொண்டு, பிள்ளைகளைப் பெற்றெடுத்தபோது, அவர்களை எந்த வருணத்தில் சேர்ப்பதென்னும் பெரிய கேள்வி எழுந்தது.

அது மட்டுமல்லாமல், ஒரு வரணத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள தொழிலை (அதாவது, தருமத்தை), இன்னொரு வருணத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர்.

அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளதுதான் விசுவாமித்திரன் கதையும், பரசுராமன் கதையும்.

விசுவாமித்திரனின் இயற்பெயர் கௌசிகன். அவன் ஒரு மன்னன். எல்லா அதிகாரங்களும் தனக்கே உரியவை என்று கருதியவன். அதன்விளைவாக, அம்மன்னனுக்கும், அந்நாட்டில் இருந்த வசிஷ்டர் என்னும் பார்ப்பன ரிஷிக்குமிடையே ஒரு மோதல் உருவாயிற்று. வசிஷ்டரிடமிருந்த 'காமதேனு' என்னும் பசுவும் தன் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டது என்று, கௌசிக மன்னன் கூறியபோது, வசிஷ்டர் வெகுண்டெழுந்தார். இருவருக்குமிடையே தோன்றிய பகையில், சத்ரியனான கௌசிகனின் தோள் வலிமையை பார்ப்பனனான வசிஷ்டரின் தவ வலிமை வென்று விட்டது. எனவே, கௌசிக மன்னனும், தவம் செய்து பெரு வலிமையைப் பெற எண்ணினான். கடுந்தவமும் செய்தான். இறுதியில் 'வசிஷ்டரின் வாயால் ராஜரிஷி' என்னும் பெயரையும் பெற்றான். அப்போதும் கூட, பிரம்மரிஷி பட்டம் வழங்கப்படாமல், ராஜரிஷி என்னும் ஆறுதல் பரிசே வழங்கப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

எவ்வாறோ, சத்திரிய வருணத்திலே பிறந்த கௌசிகன், பார்ப்பன வருணத்திற்குரிய தர்மமான தவம் புரிந்து, விசுவாமித்திரன் ஆனான். வருண தர்மம் இங்கு தவறிப்போனது.

நேர்மாறாக, பார்ப்பன வருணத்திலே பிறந்த பரசுராமன், ஆயுதம் ஏந்தி மன்னர்களோடு போரிட்டு வென்றான். இங்கும் வருண தருமம் பிழைத்துப் போயிற்று.

எனவே, வருணம் மாறி ஏற்பட்ட ஆண், பெண் உறவினாலும், வருணம் மாறி மேற்கொண்ட தொழிலாலும், வருணாசிரம தர்மம் ஆட்டம் கண்டனது. மேல், கீழ் என்னும் அடுக்குகள் சிதையத் தொடங்கின.

இதனால், வருண அடுக்கின், மேல் தட்டில் இருந்தவர்களின் நிலை கவலைக்குள்ளானது. தங்களின் வசதியான மேல் நிலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தவிப்பு அவர்களிடம் மேலோங்கியது.

அதன் விளைவாகவே, கி.பி.5ஆம் நூற்றாண்டு வாக்கில், அவர்கள் இரண்டு பெரிய காரியங்களைச் செய்து முடித்தனர் என்று அம்பேத்கர் தன் ஆய்வில் சில உண்மைகளை வெளிப்படுத்துவார்.

அந்த உண்மைகள் எவை என்பதை நாம் பார்ப்போம்.

Text Widget

Text Widget