Friday, March 7, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 9

9


இடஒதுக்கீடு! - சமூக நீதிப் போராட்டத்தின் தொடக்கம்

தொழிலுக்கும், சாதிக்கும் ஏற்படுத்தப்பட்ட பிணைப்புக் காரணமாக அரசு அதிகாரிகள், எழுத்தர்கள், தட்டச்சர்கள் முதலான அனைவரும் ஒரு குறிப்பிட்ட சாதியினராகவும், ஏவலர்கள், கூலிகள், துப்புரவாளர்கள் முதலான அனைவரும் பிற சாதியினராகவும் அமைந்தனர். 19ஆம் நூற்றாண்டில் இறுதி வரையில் இந்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

'ஏன் இந்நிலை?' என்னும் சிந்தனை கூட எழவில்லை. 'வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவதே' வாழ்க்கைத் தத்துவம் என்று கருதிய மக்களே இங்கு பெரும்பான்மையினராக இருந்தனர்.

ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சாதியச் சமூகத்தில் பலருக்கும் வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை முதலில் தெரிவித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தாம் என்பது குறிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.

09.03.1894 அன்று வெளியிடப்பட்ட, அரசுக் குழு ஒன்றின் நிலை ஆணைதான் (Board's Standing order - 128(2)), ''அரசு வேலைகளில் ஒரே ஒரு சாதியாரின் ஆதிக்கம் இருப்பதை'' அறிந்து கூறியதுடன், அந்நிலை மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரையும் செய்தது, ஆனால் அது வெறும் பரிந்துரையாக மட்டுமே இருந்தது. நடைமுறைக்கு வரவில்லை.

1892ஆம் ஆண்டு, அனைவருக்கும் வேலைப் பகிர்வு வேண்டும் என்று கூறி, பார்ப்பனரல்லாத பலர் கையொப்பமிட்டு, அன்றைய சென்னைத் தலைமாகாண (Madras Presidency) ஆளுநராக இருந்த வென்லெக்கிடம் மனுக் கொடுத்தனர். அதற்கும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.

1912இல், 'சென்னை ஐக்கிய சங்கம்' (Madras united League) என்று பெயரிடப்பட்டு, 1913ஆம் ஆண்டு 'திராவிட சங்கம்' என்று மாற்றப்பட்ட அமைப்பு, பார்ப்பனரல்லாதோர்க்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு என்னும் கோரிக்கையை முன்வைத்துப் பல பணிகளை ஆற்றியது.

அவ்வமைப்பின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் 1916ஆம் ஆண்டின் இறுதியில் 'தென் இந்திய நல உரிமைச் சங்கம்' என்னும் அமைப்பு உருவானது. சி.நடேசனார், சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் அதனை உருவாக்கிய சிற்பிகள் ஆவர். அமைப்பின் சார்பில் 'நீதி' (Justice)என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. அதனைக்கொண்டு, அவ்வமைப்பு சுருக்கமாக 'நீதிக்கட்சி' (Justice party) என்று அனைவராலும் அறியப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் நடுவில், காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் வெளியிட்ட ஒரு சிறு அறிக்கை, உலகையே தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அவ்வறிக்கையின் பெயர் 'பொதுவுடமைக் கொள்கை அறிக்கை' (Communist manifesto) என்பதாகும். அதைப்போல, 20.12.1916 அன்று, நீதிக்கட்சி 'பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை' (Non-Brahmin Manifesto) என ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கை தமிழக வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல், பிறகு தோன்றிய, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியனவற்றிற்கான முன்னோடியாகவும் அமைந்தது.

இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை, நீதிக்கட்சி மிக வலிமையாக உயர்த்திப் பிடித்தது. அதனால் அக்கட்சியின் செல்வாக்கு, தமிழ்நாட்டிலும், அன்று சென்னைத் தலைமாகாணத்தில் இணைந்திருந்த தென்னிந்தியப் பகுதிகளிலும் மிக விரைந்து பரவியது.

அதனைக் கண்ட காங்கிரஸ் கட்சிக்குள்ளும் விவாதம் பரவியது. காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதோர் ஒருங்கிணைந்து 'சென்னைத் தலைமாகாண சங்கம்' (Madras presidency Association) என ஒன்றை உருவாக்கினர். பெரியார், திரு.வி.க. போன்றோர் அச்சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருந்தனர். அச்சங்கமும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்தது.

இடஒதுக்கீடு என்பது, வேலை வாய்ப்புகளில் மட்டும் இடம் கோருகின்ற கோரிக்கை அன்று. கல்வி, வேலை, அரசியல் என மூன்று தளங்களிலும், அனைத்துச் சாதியினருக்கும் சம உரிமை கோருகின்ற சமூக நீதிப் போராட்டத்தின் தொடக்கமே அது என்பதைத் தமிழ்ச் சமூகம் மெல்ல மெல்ல உணர்ந்தது.

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் வி.பி.சிங் கூறியதைப்போல, ''இட ஒதுக்கீடு என்பது, அதிகாரக் கட்டமைப்பில், சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதியினருக்கும் பங்கு அளிப்பதுதான்.'' (It is a question of power sharing and not jobs alone)

எப்போதும், எந்தச் சமூகத்திலும், சமூக மாற்றத்திற்கு முன்னோடியாக அமைவது, அதிகாரக் கட்டமைப்பின் மாற்றமே ஆகும். 'உயர் சாதியினர்' எனப்படுவோரிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அதிகாரங்களை, அனைத்துச் சாதியினருக்கும் பகிர்ந்தளிக்கும் ஜனநாயகப் பாத்திரத்தைத்தான் இடஒதுக்கீடு செய்கிறது.

இதனைத் தெளிவாக உணர்ந்த இஸ்லாமியர்கள், 'முஸ்லீம் லீக்' கட்சி தொடங்கப்பட்ட உடனேயே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையையே முதலில் முன்னிறுத்தினர். 1906 அக்டோபர் 1ஆம் நாள், ஆகாகான் தலைமையில், அன்றைய தலைமை ஆளுநர் மிண்டோவைச் சந்தித்து, இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோரினர்.

அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, 1909ஆம் ஆண்டு, மின்மோலிமார்லி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்குத் தேர்தல்களில் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. அரசியல் தளத்தில் மட்டுமே அந்த இடஒதுக்கீடு அமைந்தது என்னும், இந்திய வரலாற்றில் அரசு வழங்கிய முதல் இடஒதுக்கீடு இதுவேயாகும்.

அவ்வொதுக்கீடு, நீதிக்கட்சிக்கும், சென்னைத் தலைமாகாணச் சங்கத்திற்கம் பெரிய உந்து சக்தியாக இருந்தது. 1917லி20ஆம் ஆண்டிகள் முழுவதும், தமிழகத்தின் அரசியல் கோரிக்கையாக அதுவே ஒலித்தது. அந்நிலை 1920ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சிக்குப் பேருதவி செய்தது.

அவ்வாண்டின் இறுதியில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்ற நீதிக்கட்சி, 17.12.1920இல், சென்னை மாகாண அமைச்சரவையை அமைத்தது. பதவியேற்றவுடனேயே, அரசு வேலை வாய்ப்புகளில் அனைத்து மதத்தினர், சாதியினருக்கம் இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

1921ஆம் ஆண்டு வெளியான அந்த ஆணைப்படி, பின்வருமாறு அரசு வேலைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

1. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள்
44%
2. பார்ப்பனர்கள்
16%
3. முசுலீம்கள்
16%
4. ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர்கள்
16%
5. தாழ்த்தப்பட்டோர்
8%

____
100
____

இவ்வாணைக்கு 'உயர் சாதியினரிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தாலும், அதிகாரிகள் அனைவரும் அவர்களாகவே இருந்தமையாலும், அவர்களின் கைகளிலேயே அனைத்துப் பத்திரிகைகளும் இருந்தமையாலும், இடஒதுக்கீட்டு ஆணைக்கு எதிராகக் கிளம்பிய ஆரவாரத்தை ஆளும் கட்சியால் சமாளிக்க முடியவில்லை. அதனால், ஆட்சிக்காலம் முடிந்த 1916ஆம் ஆண்டு வரையில், ஆணையை அவர்களால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.

எனினும் அந்தக் காலகட்டத்தில்தான், தேவதாசி ஒழிப்புச் சட்டம், இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் முதலானவை உருவாக்கப்பட்டன.

1916ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். (அப்போதே தேர்தல் கூட்டணி ஏற்பட்டுவிட்டது)

அந்த ஆட்சியில், பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலியார்தான் 1927இல், வகுப்புவாரி ஆணையை முதன் முதலாக நடைமுறைப்படுத்தினார்.

'கம்யூனல் ஜி.ஓ' (Communal G.O) என்று அறியப்பட்டு, புகழ்பெற்ற ஆணையாக அது இன்றும் விளங்குகின்றது. தமிழக வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஆணையாக (G.O.M.S.No. 1071 - 04.11.27) அது அமைந்தது. அவ்வாணை தொடங்கியே, ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி, வேலை உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகம், முன்னேற்றப் பாதையில் முதல் அடி எடுத்து வைத்தது.

ஆணையை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், துறை வாரியாகப் பல்வேறு தொடர் ஆணைகளை வெளியிட்டு, 1929ஆம் ஆண்டிற்குள், அதன் பயன்களையும் காணச் செய்த பெருமை முத்தையா முதலியாருக்கே உண்டு. அதனால்தான் தந்தை பெரியார் 'முத்தையா முதலியார் வாழ்க' என்று தலையங்கம் எழுதியதோடு, தன் அண்ணன் மகன் ஈ.வெ.கி.சம்பத் திருமணத்தையும் அவர் தலைமையிலேயே நடத்தினார்.

ஆனால் அந்த ஆணையும், இடஒதுக்கீட்டுக் கொள்கையும், இன்னொரு புறத்தில் மிகக் கடுமையாக இன்று வரை எதிர்க்கப்படுகின்றன.

2006 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள, ''Falling over Backwards'' என்னும் தன் நூலில், அருண்சௌரி, இட ஒதுக்கீடுடுக் கொள்கையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். 1906ஆம் ஆண்டு, இசுலாமியர்கள் இடஒதுக்கீடு கோரிக் கொடுத்த மனுவே, வெள்ளைக்காரர்களால் தயாரிக்கப்பட்டதுதான் என்கிறார் அவர். 'சிம்லாவின் அந்த நாள்தான்' (1911 வரை சிம்லாதான் தலைநகர்) இந்திய மக்களின் மனங்களில் பிரிவினையை விதைத்த நாள் என்பது அவர் கூற்று. இடஒதுக்கீட்டின் பேரில், இந்துக்களிடம் பிரிவினை எண்ணத்தை வெள்ளையர்கள் திட்டமிட்டு உருவாக்கினர் என்றும், 'பிரித்தாளும் சூழ்ச்சியே இடஒதுக்கீடு' என்றும் கோபக் கணைகளை அவர் வீசுகின்றார் அருண்சௌரி ஒரு குறியீடு மட்டுமே. உயர்சாதியினர் என்று தம்மைக் கருதிக் கொண்டிருக்கும் அனைவரின் எண்ணமும் அதுதான்.

நாட்டை ஆளவந்த அந்நியர்கள், உள்நாட்டு மக்களைப் பிரித்தாள முயல்வார்கள் என்பது இயற்கையே. ஆனால் பிரிவினைகளும், ஏற்றத் தாழ்வுகளும் வெள்ளையர்கள் ஏற்படுத்தியவை அல்ல. அவை இந்து மதத்தின் பிரிக்கப்பட முடியாது பகுதிகள் என்பதே உண்மை. அவற்றை அந்நியர் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். எனினும், ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, அவற்றைப் பேணிப் பாதுகாத்த குற்றவாளிகள் யார் என்பதை நாம் மறைக்க முடியாது.

ஏற்றத்தாழ்வே, ஒரு சமூகத்தின் அடிப்படை வடிவமாக இருக்குமெனில், அதனை உடைத்தெறியும் ஜனநாயகச் சமத்துவக் கடமை புதிய தலைமுறைக்கு உண்டு என்பதையே, இடஒதுக்கீட்டுக் கோரிக்கை நமக்கு உணர்த்துகின்றது.

ஆனாலும், 'ஏற்றத்தாழ்வு' என்னும் நச்சுமரத்தை, 1927ஆம் ஆண்டு 'கம்யூனல் ஜி.ஓ' வால், ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்திவிட முடியவில்லை. அதன்பின்னும் பல போராட்டங்கள் நடைபெற்றன அல்லது அதன் பிறகுதான் பல போராட்டங்கள் தொடங்கின.



Monday, March 3, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை! - 8

8

இதுதான் 'ராம ராஜ்யம்':


பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்றே நம்மில் பலர் நம்புகின்றோம்.

ஆனால் பகவத் கீதையின் உள்ளடக்கம், மொழி நடை ஆகியனவற்றை ஆராய்ச்சி செய்த வரலாற்றாசிரியர்கள் அக்கருத்தை மறுக்கின்றனர்.

மகாபாரதம் ஒரே நாளில் அல்லது ஒரே காலத்தில் உருவான காப்பியம் அன்று. பல நூறு கிளைக் கதைகளாக மக்களால் அறியப்பட்டு, மெல்ல மெல்ல ஒன்றான பெருங்காப்பியமே அது. அதன் இறுதி வடிவம் அல்லது இன்றைய வடிவம் ஏற்படுவதற்குப் பல்லாண்டுகள் ஆகியிருக்கக்கூடும்.

பகவத்கீதையைப் பொறுத்தமட்டில், கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில், இடைச் செருகலாக மகாபாரதத்துள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதே ஆய்வாளர் கருத்து. பகவத் கீதை, கிருஷ்ணனை எல்லாம் வல்ல கடவுளாகக் காட்டுகிறது. மகாபாரதத்திலோ, அவர் ஒரு பாத்திரமாக மட்டுமே படைக்கப்பட்டுள்ளார். ஒரு விருந்தில் கிருஷ்ணருக்குத் தருமர் முன்னுரிமை கொடுக்காததைக் கூட, சிசுபாலன் மிகக் கடுமையாகச் சாடுவதை மகாபாரதத்தில் காண முடிகிறது. சிசுபாலன் போன்ற துணைப் பாத்திரங்களால் கூட விமர்சிக்கப்படுகின்ற சாதாரணப் பாத்திரப் படைப்பாகவே நாம் கிருஷ்ணரைப் பார்க்கின்றோம்.

மேலும், சங்க இலக்கியம், திருக்குறள், சிலம்பு முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் எவற்றிலும் பகவத் கீதை பற்றிய சிறு குறிப்பும் காணப்படவில்லை. அன்று நிலவிய சமயங்கள், சமயக் கோட்பாடுகள் ஆகியன குறித்து விவாதிக்கும் மணிமேகலை கூட, பகவத்கீதை பற்றி எதுவும் பேசவில்லை. எனவே அது ஒரு பிற்காலப் படைப்பே என்பது தெளிவாகின்றது.

பிற்காலத்தில் அப்படி ஓர் இலக்கியம் ஏன் தேவைப்பட்டது என்பதற்கான காரணங்களும் தெளிவாக உள்ளன. வருணக் கலப்பில் பிறந்த குழந்தைகள் பஞ்சமர்களாகவும், சண்டாளர்களாகவும் ஆக்கப்பட்டு, சமூக விலக்கலுக்கு ஆளாக்கப்பட்டதைப் பார்த்தோம்.

திருமணங்களால் மட்டுமின்றி தம் வருணங்களுக்கு உரிய தொழில்களைக் கைவிட்டு, வேறு வருணத்தார்க்கு உரிய தருமங்களைக் மேற்கொள்வதாலும் வருணங்கள் உடைபடுகின்றன. அதனைத் தடுப்பதற்கு ஒரு வலிமையான ஆயுதம் தேவைப்பட்டது. அதுவே பகவத் கீதை.

பகவத் கீதையில் பல்வேறு கருத்துகளும், தத்துவங்களும் கூறப்பட்டுள்ளன என்று கூறுவர். ஆனால் அவை அனைத்துக்கும் மைய இழையாக, சாரமாகக் கூறப்பட்டுள்ள செய்தி, ''சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்'' என்பதே ஆகும். அதாவது, 'சதுர் (நான்கு) வருணங்களும், என் படைப்பே (சிருஷ்டி)' என்று கிருஷ்ணர் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ள வரியே கீதையின் சாரம். இந்நிலை, கீதையில் எவ்வாறு படிப்படியாக நிறுவப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.

ஏழாவது இயல், 16ஆம் பத்தியில், கிருஷ்ணர் தன் பக்தர்களை நான்கு வகையாகப் பிரிக்கின்றார். அங்குதான் நால்வருணக் கோட்பாடு உறுதி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வகையினருக்கும் ஒவ்வொரு விதமான தருமம் அறிவுறுத்தப்படுகின்றது.

எனினும், 9ஆவது இயலில், ''என் வெறுப்புக்கு உரியவர் என்றோ, விருப்பிற்கு உரியவர் என்றோ எவரும் இல்லை''('None is hateful to me, none dear') என்று கிருஷ்ணர் கூறும்போது, ஒரு விதமான 'சமத்துவம்' தென்படுகின்றது. ஆனால், 12-வது இயலிலேயே, 'அர்ஜீனன் என் மிகுந்த விருப்பத்திற்கு உரியவன்' என்று அவர் கூறுவது சுயமுரணாக உள்ளது.

பின்பு, தம் வருண தர்மத்தைச் செய்யாதவர்களைத் தாம் ஏற்பதில்லை என்கிறார். அது மட்டுமல்லாமல், வருண ஏற்பாட்டை ஏற்காதவர்கள் முக்தி (நஹப்ஸ்ஹற்ண்ர்ய்) அடைய முடியாது என்றும் கூறுகின்றார்.

''ஒரு சூத்திரன், எவ்வளவு சிறந்த பக்திமானாக இருந்தாலும், அவன் தனக்குரிய தருமத்தை (அதாவது மற்ற வருணத்தார் மூவருக்கும் ஏவல் தொழில் செய்வதை) முறையாகச் செய்யவில்லையெனில், அவனுக்கு ஒரு நாளும் முக்தி கிடையாது'' என்கிறார் கிருஷ்ணர்.

எனவே பகவத்கீதை, வருண தருமத்திற்கு ஏற்ப வாழ்வதையே சிறந்த பக்தி மார்க்கமாகக் கூறுகின்றது. கடவுளை வணங்கு, கடவுளுக்குத் தொண்டு செய் என்பதற்குப் பதிலாக, மேல் வருணத்தாரை வணங்கு, அவர்களுக்குத் தொண்டு செய் என்று கீதை வலியுறுத்துகின்றது.

இந்தக் காரணத்தினால்தான், ''பகவத் கீதை, இந்துக்களின் புனித நூல்'' என்று 'மேல் வருணத்தார்' திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். இந்துக்கள் அனைவருக்கும் கிருஷ்ணன் மட்டும்தான் கடவுளா? சிவன், முருகன் போன்றவர்கள் கடவுளர்கள் இல்லையா? பகவத் கீதை மட்டும்தான் புனித நூலா? திருமுருகாற்றுப்படை புனித நூல் இல்லையா?

எனவே இங்கு முன் நிறுத்தப்படுவது கடவுள் அன்று, அவர் பெயரால், அவரால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் நான்கு வருணங்களும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள தருமங்களுமே என்பதை உணரலாம்.

வருண தருமத்தை யாரும் மறுக்கக் கூடாது என்பதும் கீதையில் முன்நிபந்தனையாகக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது இயலில் உள்ள 26ஆவது பாடல், ''இங்கு கூறப்படும் கருத்துகள் மீதான எந்த சந்தேகத்தையும், அப்பாவி மக்களிடம், புத்திசாலிகள் ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது'' என்று ஆணையிடுகின்றது.

இராமாயணத்திலும் வருண தருமத்தைப் பாதுகாக்கக் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கம்பர், யுத்தகாண்டம் வரை மட்டுமே இராமாயணத்தை எழுதியுள்ளார். இராமர் அரசராகப் பதவியேற்கும் ('பட்டாபிஷேகம்') காட்சியோடு, கம்ப இராமாயணம் நிறைவடைகின்றது. எனவே 'ராமராஜ்யம்' எப்படியிருந்தது என்பதைக் கம்பர் மூலம் நாம் அறிய முடியாது. அதனை அறிந்துகொள்ள, மூல நூலான வால்மீகி ராமாயணத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

யுத்தகாண்டத்திற்கு அடுத்ததாக வால்மீகி படைத்துள்ள காண்டம் உத்தரகாண்டம். அக்காண்டத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒருநாள் அரசர் இராமர் அரசவையில் அமர்ந்திருக்கும்போது, பார்ப்பனச் சேரியைச் சேர்ந்த சிலர் அங்கு வருகின்றனர். தங்கள் குழந்தை ஒன்று திடீரென இறந்து விட்டதாகவும், சம்பூகன் என்னும் ஒரு சூத்திரன் அருகிலுள்ள வனம் ஒன்றில் தவம் மேற்கொண்டிருப்பதே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

அதைக்கேட்ட இராமர் மிகுந்த சினம் கொள்கின்றார். 'சூத்திரன் ஒருவன், பிராமணர்களுக்கு உரிய தருமமான தவத்தை மேற்கொள்வதா? என் ஆட்சியில் இப்படி ஓர் அவச் செயலா' எனச் சொல்லி, 'வாருங்கள், அவன் தவம் செய்யும் காட்சியைக் காண நானே நேரில் வருகிறேன்' என்று புறப்படுகின்றார்.

அவர்கள் அந்த இடத்திற்கு இராமரை அழைத்துச் செல்கின்றனர். அங்கே சம்பூகன் தவம் செய்யும் காட்சியை அவரே நேரடியாகக் காண்கின்றார்.

சம்பூகனைப் பார்த்து, ''தவத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் வாய்மை தவறக் கூடாது. சொல், நீ எந்த வருணத்தைச் சேர்ந்தவன்'' என்று கேட்க, தான் ஒரு சூத்திரன் என்று விடை பகர்கின்றான்.

உடனே தன் வாளை உருவிய இராமர், அந்த இடத்திலேயே அவன் தலையைக் கொய்து விடுகிறார். சம்பூகளைக் கொன்று, வருணாசிரமதர்மத்தைக் காப்பாற்றி விடுகிறார்.

கவனத்தில் வையுங்கள் - இதுதான் 'ராம ராஜ்யம்'.

மானசீனமாகத் துரோணரை ஆசிரியராகக் கொண்டு, வில்வித்தை பயின்ற ஏகலைவனின் கட்டைவிரல் வாங்கப்பட்டதும், வருணாசிரமத்தைக் காப்பதற்குத்தான்!

ஒரு பக்கம், வருணங்களை - அறிவது மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை - நான்தான் படைத்தேன் என்கிறார் கிருஷ்ணர்.

இன்னொரு பக்கம், வருணத்தைக் காப்பதற்காகச் சம்பூகன் தலையை வெட்டுகின்றார் இராமர்.

இவ்வாறு கடவுளால் உருவாக்கப்பட்டு, கடவுளால் காப்பாற்றப்படுவதுதான் வரணதர்மம் என்று அழுத்தமாக் கூறிவிட்ட பிறகு, கடவுளின் படைப்பை, கடவுளின் ஆணையைச் சாதாரண மனிதனால் எப்படி மீற முடியும்?

மனிதர்கள் அடங்கிப் போனார்கள். விரும்பியோ, விரும்பாமலோ வருணத்தை, அதற்கான தருமத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

தொடக்க காலத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருணம் தீர்மானிக்கப்பட்டது. பிறகு, பிறவி முழுவதும் ஒரே வருணம்தான் என்றானது. காலப்போக்கில், தலைமுறை தலைமுறைக்கும் வருணம் மாறாதது என்று ஆக்கப்பட்டது.

வருணம் இறுகிச் சாதியாக ஆனது. சாதிகளுக்குள் பல பிரிவுகள் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான உட்சாதிகள் தோன்றின. உட்சாதிகளுக்குள் கூட கொள்வினை, கொடுப்பினை மறுக்கப்பட்டு, 'அகமணம்' உறுதி செய்யப்பட்டது.

சாதிக்கு ஒரு நீதியும், சாதிக்கு ஒரு தொழிலும் சமூகச் சட்டங்களாயின. சாதிகளோடு தொழில்கள் பிணைக்கப்பட்டதால், சாதிகளுக்குக் கற்பிக்கப்பட்ட அனைத்து ஏற்றத் தாழ்வுகளும், தொழில்களுக்கும் பொருத்தப்பட்டன. இந்தத் தொழில் உயர்ந்தது, இந்தத் தொழில் தாழ்ந்தது என்னும் மனப்பான்மை எங்கும் பரவியது.

'நம்ம சாதியல பொறந்திட்டு, இந்தத் தொழில் செய்யலாமா நீ?' என்பன போன்ற பேச்சுகள் இன்றும் நம் காதுகளில் விழக் கேட்கின்றோம். எனவே, வேலையில்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம், 'இழிசாதியினருக்குரிய இழி தொழிலைச் செய்யக் கூடாது' என்னும் இழிவான எண்ணம் இளைஞர்களிடையே தோன்றியது.

இப்போது ஒரு தொழிலில், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனரே... அரசுப் பணிகளில் ஆயிரம் சாதியினர் இல்லையா!... ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சாதியா என்றெல்லாம் கேட்கலாம்.

சாதிக்கும், தொழிலுக்குமான உறவு இப்போது பெரிதும் உடைபட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் இன்றும், மேலும், கீழும் சாதிலிதொழில் உறவு இருக்கத்தான் செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் இன்று வரை ஒரே சாதியினர்தானே? (வருங்காலத்தில் நிலைமை மாறலாம்). அதேபோல, பிணம் எரிப்பவர்களும், செருப்புத் தைப்பவர்களும், சாக்கடை சுத்தம் செய்பவர்களும் ஒரே ஒரு குறிப்பிட்ட சாதியினர்தானே?

இடைநிலைகளில் - அரசுப் பணி, ஆசிரியப் பணி போன்றவற்றில் - ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கூட ஒரே இரவில் ஏற்பட்டுவிடவில்லை. அதற்காக இங்கே ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன.

அவற்றுள் ஒன்றிரண்டையேனும் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

Text Widget

Text Widget